Tuesday, November 27, 2007

ஆயுள் கைதி,....




உனக்காக
காத்திருக்கையில்.....

நகராத நாட்கள்....
நீங்காத நேரங்கள்...
குறையாத மணித்துளிகள்....
அத்தனையும்
சொல்கிறது பெண்ணே !!!...
"கவிதையான நிலவுக்கு"
காத்திருக்க வேண்டுமாம் ...

கண்டதும் காதல் ...
இல்லை !!!.. இல்லை !!!....
காணமலும் காதல் வரும் ...
ஆதாரம் கேட்கிறார்களா ?..
அனுப்பிவை என்னிடம்....

சிணுங்கல்களால் எனை
சிறை பிடித்தவளே,....
விடுதலையே வேண்டாம்..
அடைத்துவிடு மனக்கூட்டில் ....
"ஆயுள் கைதியாய் "
தீர்ப்பும் சொல்லி !!!....

Monday, November 19, 2007

என்னவனே ...



என்னவனே ...

அழுவதற்கும் ஆசையடா
தலை சாய்த்து உன் மடியில் !!!....
தடுக்கி விழ ஆசையடா
தாங்கி கொள்ள நீ இருந்தால் !!!...

தோற்பதற்கும் ஆசையடா
ஆறுதலாய் உன் தோளிருந்தால் !!!..
கோபப்பட ஆசையடா...
குளிர்விக்க நீ இருந்தால்.....

வெட்கம் விட ஆசையடா
வெளிச்சமாக உந்தன் முன்னில் !!!....
பட்டினியில் ஆசையடா
பசி மாற்ற நீ இருந்தால் !!!....

இமை மூட ஆசையடா
கண் மணியாக நீ இருந்தால் !!!..
நினைவிழக்க ஆசையடா
உணர்விக்க நீ இருந்தால் !!!...

விபரீத ஆசைகளே
விரகமாகி போனதடா !!!...
அணை போட வாராயோ
அனுதினமும் மரணமடா !!!...

Monday, November 12, 2007

அந்த நாள் வரை ,...



மார்கழி பனியில்
அதிகாலை பூக்கள் ,...
சித்திரையில்
பௌர்ணமி நிலவு...
மரத்தில் மாங்கனியோடு
அணீலின் கொஞ்சல் ...

கூட்டமாக பறக்கும்
தேசாடன பறவைகள்...
கரையோடு காதல்தீரா
அலையோசை...
வான்மகளின்
முகம் சிவந்த வெட்கம்,...

சந்திரனை கண்ட
அல்லியின் சிரிப்பு,.... என
அத்தனை அழகையும்....
அபகரித்த உனைக்கண்ட...
அந்த நாள் வரை ,...

காதலித்திருந்தேன் !!!...
அன்பே !!!...
உனைவிட்டு அவைகளை !!!...

Sunday, November 11, 2007

என் காதல்,...


என்னவளே !!!...
உன் இதயத்தை
நானும்
தடவிக்கொண்டும்...
வருடிக்கொண்டும்...
புரியமாட்டேன்
என்கிறது பெண்ணே !!!
குருடனுக்கு கிடைத்த
மோனோலிஸா ஓவியமாய்...!!!!....

தேடி தேடி கால்கள்
தேய்ந்தது தான் மிச்சம் !!!...
அகராதியே கிடைக்கவில்லை
உன் மௌனத்தின்
அர்த்தம் பார்க்க...!!!...

ஊமை கண்ட
கனவாய்...என் காதல்
ஊனமாகி போனதடி !!!...
ஊர் அறிய ஆசை இல்லை !!!...
ஊன்றுகோலாய்....
நீ உணர்ந்தால் போதுமடி..!!!

எழுத மறந்த டைரி,....






எனது
இனிய தோழர்களே !!
இது கவிதை அல்ல ஒரு சிறு கதையாக
நினைத்து படிக்கவும்.....
அன்புடன்
விஷ்ணு.....


என் நினைவுகள்
பின்னில் நடக்க
நினைத்து பார்க்கின்றேன்,...
வாசலின் ஓரம்..
தணல் தந்த மாமரம்...
உதிர்ந்து கிடந்த மாம்பூக்கள்...
இரை என பூக்களை
சிறை பிடித்த கோழிகள் ...
சிலிர்த்துக்கொண்டு துப்பியதும்...
சிறு தூறல் மழையில்
தாகம் தீர்க்க வந்த காகங்கள்
கோழியின் கொஞ்சல் கண்டு
ஓடியதும் என் மனதில்
இன்றும் மறையாமல் இருக்கிறது....

அன்று நீ...
மஞ்சள் பாவாடையும்
கருப்பு சட்டையுமாய்...
ஒய்யாரமாக நடந்து வர...
இடப்புற கோழிக்கூண்டல்லவா
எனக்கு அடைக்கலம் தந்தது
உனை கடை கண்ணால் பார்க்க....
அன்று எனை கண்டு
அத்தே !!!!! ... என்று அலறியதையும்
நானும் மறக்கவில்லை....
கோவில் குளத்தில்
குளித்தெழுந்த எனது
அரைகுறை ஆடையும்...

நீ...
சைக்கிள் ஓட்டி
படிக்கவேண்டும் என்றாய்...
நானும்
மெயின் ரோட்டில்
பழனி அண்ணன் கடையில்
காவலாய் காத்திருந்து
உருட்டிக்கொண்டு வந்தேனே
சைக்கிளை உனக்கு சொல்லித்தர ...
அன்று மாலைவரை
சைக்கிளை நீ மிதிக்க
விழாமல் இருக்கவே
இருக்கைக்கு பதில்...
உன் இடுப்பை
எத்தனை முறை பிடித்தேன்
என்பது எனக்கு மட்டுமே
தெரிந்த விசயம்...அதை
இன்றும் என் நெஞ்சிலே
இன்ப நினைவாய் கொண்டு நடக்கிறேன்...

அடுத்த
ஐந்தாரு நாட்கள்
உனை ஆளையே காணவில்லை...
பார்க்க வரலாம் என்றால்..
அந்த பக்கமே போகாதே !!!..
அம்மாவின் ஆணை...
அன்று சைக்கிள் ஓட்டுக்கையில்
இரண்டு முறை கீழே விழுந்தாய்
ஏதாவது அடிபட்டதோ?
என்னிடம் சொல்லாமல்
மறைத்து விட்டாயோ?
தெரியவில்லை...
என் மனமோ
அந்த வாரம்
முழுவதும் சஞ்சலத்தில்....

அடுத்த நாள்
அம்மாவும் பக்கத்துவீட்டு
கனகக்காவும்
மாடு கழுவ வரும்
பேச்சிமுத்துவும்
குசுகுசுக்கும் ஓசை ...
உன்னை பற்றியோ
சந்தேகம் வர
காது கொடுத்தேன் ...
ஒன்றும் புரியவில்லை.....
சாப்பாடும் இறங்கவில்லை
சாப்பிடவும் பிடிக்கவில்லை ...
யோசித்து பார்த்தேன்....
மீண்டும் சந்தேகம்....

பழனியாத்தா பேத்தி
குருவம்மாவுக்கு
பேய் பிடிச்சதா சொன்னாங்க
அது ஏதாவது...
ஒண்ணுமே புரியல ...
பிள்ளையார் கோயிலுக்கு
நாளைக்கு போகணும்....
நினைத்துக்கொண்டு
படுத்துவிட்டேன்...

காலையில்
பிள்ளையாரைதொழுது
அம்மாவிடம்
கணக்குநோட் வாங்க
ராசு வீட்டுக்கு போகிறேன்
பொய் சொல்லி
நடையை கட்டிவிட்டேன்
உன் தெருவுக்கு...

ராசுவை கண்டு
"ஏன்டா செல்விக்கு என்னாச்சு ?"
என்ற போது
"எனக்கு தெரியாது என்றான்"...
அவுக வீட்டிலே நெறய
உறமுற வந்திருக்காக .....
எட்டிபாரடா என்று எப்படி சொல்லியும்
முடியாது என
முடிவாக சொல்லிவிட்டான் ...

மரப்பேட்டை
சேட்டு கடையில்
வாங்கிய பம்பரம்
பாக்கெட்டில் இருந்தது (30 காசு)
தானமாக அதை கொடுத்து
உன்னை பார்த்து வர சொன்னதை
நினைத்து பார்க்கிறேன்...

கரிசனம் என் மீதோ.....
இல்லை... உன் மீதோ தெரியவில்லை
ஓடி வந்து சொன்னான்
"டேய் செல்வியை உக்காற வச்சிட்டாங்கலாம் ".....
யாரோ இருவர்
பேசி கொண்டதில்
கிடைத்ததை எனக்கு கொட்டினான்...
புரியவில்லை இருந்தும்
யோசித்து பார்த்தேன்...
மெதுவாக நடக்க ஆரம்பித்தேன்....
யாரிடம் கேட்பது என
தெரியவும் இல்லை....
அன்றும் தூங்கவில்லை....

ஒரு வாரம் முடிந்திருக்கும்
நீயும் கருவாச்சி
பூங்கொடியும்
கோவிலுக்கு போவதாக...
சொன்னது...
ரெட்டத்தலை பாண்டி...
ஓடோடி வந்தேனே உனை பார்க்க...
ஞாபகம் இருக்கிறதா உனக்கு ?
புதிதாய் தெரிந்தாய் !!!...
உன் உடையில் மாற்றம் !!!...
உன் நடையில் மாற்றம் !!!...
உன் பார்வையில் மாற்றம் !!!...
எல்லாம் மாறி விட்டது
அடிக்கடி என் வீட்டிற்க்கு வரும் நீ ....
அத்திப்பூத்தாற் போலேவர தொடங்கினாய் ...
என் முகத்தை நேரில் பார்க்க மறுத்தாய் ...

"நீ மறைந்திருந்து பார்ப்பது போல்
நானும் உணர தொடங்கினேன் "...!!!...

எழுத மறந்த டைரி..... 2 பாகம்





அன்று
ஒன்பதாம் வகுப்பில்
நாம் இருக்கும் இறுதி நாள்
இனி நான்கு நாட்கள் விடுமுறை
அது முடிந்தால் முழுப்பரிட்சை ...
வரும் போதேமூர்த்தியிடம்
சொல்லி இருந்தேன்
அவன் எனது நெருங்கிய தோழன்
உனக்கு தெரியும்
ஆனால்
அவனை பற்றி தெரியாத
ஒரு விசயம் ...
அவனுக்கு ரா,ரு,ரே என்ற
உச்சரிப்பு வராது
அவன் பெயரையே
அவன் திகுமூர்த்தி என்பான் ...
திருமூர்த்தி அப்படி
உருமாரும்
அவன் உச்சரிப்பில்....
ஆனால் மிகவும் நல்லவன் ..
அவன் வேண்டாம் என்று சொல்லியும்
முடிவெடுத்தேன்
உன்னிடம் பேச ...

காலையில்
இன்டர்‌வ்ல் மணி அடிக்க
நீயும் கருவாச்சியும் ( பூங்கொடி)
எப்பவும் நிற்கும் வேப்பமரத்தடிக்கு
அவனையும் இழுத்துக்கொண்டு
வந்ததை நினைத்து பார்க்கின்றேன்...

உன்னை நெருங்குகையில்
நெஞ்சம் கொஞ்சம் படபடத்தது...
மனதில் தைரியத்தை வரவழைத்து
உன்னிடம்சொல்லியே ஆகவேண்டும்
என்ற உறுதியில்
உனை நெருங்கினேன்
நெருங்க நெருங்க சிறிது வேர்த்தது ...
என்னை நானே சபித்துக்கொண்டேன்...
லெட்டர் ஆவது எழுதியிருக்கலாம்
அப்போது தோன்றவில்லை ...

நான் சொல்லவேண்டும் என
நினைத்ததை முக்கியமாக
சொல்ல மறந்து ..பேசவேண்டும் என்பதுபோல்
ஏன் என்னிடம் பேசுவதில்லை ?...என்றேன்..
நீயோ.... அப்புறம் இப்புறம் பார்த்துவிட்டு
ஒன்றுமில்லை என்று
உள்ளுக்குள் சிரித்ததை
உணர்ந்துகொண்டேன்...

அதற்குள் பள்ளிமணி அடிக்க
இனி நின்றால் தண்டபாணி வாத்தியாரின்
தடி அடி கிடைக்கும் ...
ஓடிவிட்டேன் உனை விட்டு.....

வகுப்பில்
நான் மூர்த்தியை
தொண தொனத்துக்கொண்டு
இருந்ததை நினைத்தால்
இப்பவும் சிரிப்பு தான் வருகிறது ...
பள்ளி விட்டு செல்கையில்
நீ என்னுடன் வர வேண்டும் ..
இதற்கு யோசனை கேட்டால்
சொல்ல தெரியாமல் முழிக்கிறான்...
நீண்ட இடைவேளைக்கு பிறகு
இருவரும் சேர்ந்து நல்ல முடிவெடுத்தோம்,...

தினமும்
மதியம் பள்ளி எதிரில்
மணியாச்சி கடையில்
டீ வாங்கி வரச்சொல்லி
தமிழ் ஐயா என்னை அனுப்புவது
உனக்கு தெரியும் அல்லவா ...
இன்றும் அனுப்பினால் வசதி...
சாமியை வேண்டி காத்திருந்தேன்
வாத்தியார் வருக்கைக்கு ....

இரண்டாவது பெல் அடிக்க
தமிழ்வாத்தியார் தொடங்கினார்
தமிழ் பாடத்தை... கோடானுக்கோடி கொடுத்தேனும் ....
தொடங்கி உண்ணாமை கோடியுரும்...
கடைசிகோடிக்கு வந்துவிட்டார்...
இனியும் டீ வாங்க மட்டும் சொல்லவில்லை...
வரிசையாக மயில்சாமி ..
அர்ச்சுனன் ,மூர்த்தி, ராசு, என
ஒவ்வொரு கோடியாக கேட்டு ..இறுதியில்
ரெட்டமண்டை பாண்டியில் வந்து நிறுத்தினார்...

இதற்கிடையில்
அவரது கை பாக்கெட்டில்
தேடுவதை பார்த்த போது
மனம் மகிழ்ச்சியானது....
பிரார்த்தனை வீண் போகவில்லை ...
இப்போது பெல்அடித்து விடுவார்கள்
உடனே காரியத்தை முடிக்கவேண்டும்...
சில்லரையை வாங்கிக்கொண்டு ஓடினேன்
உன் சைக்கிளை தேடி வேப்பமரத்தடிக்கு...

உனது சைக்கிளை வேகம்
அடையாளம் காண முடிந்தது
புதியது அல்லவா... அடுத்து சென்று
பின் சக்கரத்தின் காற்றை விடுதலை செய்தேன்....
வேலை முடிந்து திரும்புகையில்...
ஓவிய மாஸ்டர் மாணிக்கம்....
உடனே தமிழ் ஐயா தந்த
சில்லரையை சிதற விட்டு
தேடுவது போல் பாசாங்கு
செய்து நழுவி விட்டேன்...
வேலை முடிந்தது..ஆனால் மனம்..
அலைப்பாய தொடங்கியது...

நீ... சைக்கிளை உருட்டிக்கொண்டு
என்னுடன் வர வேண்டும் ....
நான் என்னவெல்லாம்
உன்னிடம் பேச வேண்டும் ...
நிறைய சினிமா காட்சிகள்
மனதில் வந்தது... அன்பே வா,...16 வயதினிலே ...
நேற்று பார்த்த கிழக்கே போகும் ரயில் என
பலவும் மின்னி மறைந்தன உள்ளத்தில் ...
எதுவும் சரியாக தோன்றவில்லை ...
நேரமும் நெருங்கி விட்டது

4.15க்கு இறுதி மணி...
நீ போய் சைக்கிளை
எடுக்கட்டும் என காத்திருந்தேன்...
மூர்த்தியிடம் இன்று மயில்சாமி பின்னால்
போக சொல்லிவிட்டு உன்னுடன்
நான் நினைத்தபடி சைக்கிளை
உருட்டிக்கொண்டு நடக்க
முடிவு செய்தேன்.....

நீ சைக்கிளை எடுத்து முன்னால் நடக்க
நான் மெதுவாக பின்னால் தொடர்ந்தேன்...
நமது ஊருக்கு இரண்டு மைல்தூரம்
செல்லவேண்டும் என நினைத்த போது
மனம் துள்ளி குதித்தது....
அத்தனை தூரம்... அத்தனை நேரம்...
உன்னுடன் ,
உன்னை பார்த்துக்கொண்டும்
பேசிக்கொண்டும் இருக்கலாம் என்றபோது
ஆனந்தம் நெஞ்சில்
அலை பாய தொடங்கியது....

உன் அருகில் நெருங்கி என்ன? என்றேன் ....
நீயோ... சைக்கிளில் காற்று இல்லை என்றாய்..
சரி காற்றாக நான் இருக்கிறேனே
உனை தூக்கி செல்ல...
மனதில் நினைத்துக்கொண்டு...
நானும் மெதுவாக உன்னுடன்
நடக்க தொடங்கினேன்...

அன்று நடந்த நமது
உரையாடல்களை இன்றும்
உருப்போட்டு பார்ப்பதில்
எத்தனை மகிழ்ச்சி தெரியுமா?...
அன்று எனக்கு உன்னுடன் நடக்க
உதவியது உனது மாமா தானே..
எதிரில் வந்த அவர் என்னிடம் பத்திரமாக
வீடு வரை கொண்டுபோய்
விடவேண்டும் என்று சொன்னது
எத்தனை வசதியாகி விட்டது..
நினைத்து பார்க்கிறேன்....

என்னை பிடிக்கவில்லையா ?....என்றேன் நானும்...
நீயோ....பிடித்து விட்டாயே உடும்பாக என்றாய்....
நீ அழகாய் இருக்கிறாய் என்றேன்....
நீயோ....உன்னோடு நிற்கையில் தானே என்றாய்...

உன் சிரிப்பு எனை மயக்குதே என்றேன் ...
நீயோ....உனக்காகவே சிரிக்கிறேன் என்றாய்....
உன் பார்வை மின்னலாய் தாக்குதே என்றேன்...
நீயோஇமையாக மாறி அணைத்திடவா உனை என்றாய்..

உன் இதழ்கள் எனை இழுக்கிறதே என்றேன் ...
நீயோ....உனக்காகவே அது இதழ் விரிகிறது என்றாய்...
உன் பேச்சு எனை மயக்குது என்றேன் ...
நீயோ....உன் மார்பில் மயங்கவே பேசுகிறேன் என்றாய்...

உன்னை கட்டி பிடிக்க ஆசை என்றேன்...
நீயோ....உன் கண்கள் எனை காயப்படுத்துகிறதே என்றாய்...
உன் நடை அழகான நடனம் என்றேன்...
நீயோ....அரங்கேறும் நாள் பார்க்க ஆசை என்றாய்...

இதயத்தில் எனக்கு இடம் தருவாயா என்றேன்...
நீயோ....உள்ளே...
கோட்டை கட்டி குடும்பம் நடத்த தெரிகிறது....
வெளியில் மட்டும் என்ன பாசாங்கு ?.. என்றாயே !!!!

என்ன பார்க்கிறாய் ? .....
இது எதுவும் நாம்
இருவரும் பேசவில்லையே
எனத்தானே....
அடி பெண்ணே.. !!!...
உனக்கு தெரியாது....
அன்று நீ பார்த்த பார்வையும் !!!...
பிடித்திருக்கிறது என்று சொன்ன
ஒரு வார்த்தையும் தான்..!!!!...
இன்று என் மனதை
இப்படி எல்லாம்
அசை போட வைத்தது....
என் அன்பே.!!!
      - விஷ்ணு