Tuesday, December 18, 2007

அபலையாக...



சுகமான குயில்நாதம்
சோகமாக வரக்கண்டேன் ...
ஏகாந்த வேளை அது ...
ஏறெடுத்து பார்த்திட்டேன் ...

ஆதரவாய் செவிசாய்த்தே...
அருமை குயில் கதைகேட்டேன் ...
கானக்குயில் வார்த்தையிலே
கதைகள் எல்லாம் கண்ணீராய் !!!...

சின்ன சின்ன ஆசைக்களும் ...
சிறிதான கனவுகளும் ...
பூத்திடவே தவம் செய்த
ஜோடிக்குயில் மறைந்த கதை !!!...

அன்றொருநாள் இரை தேட
ஆண்குயிலும் போனவேளை
அடங்காத பசியோடே
ஆர்பரித்த காட்டு தீயும் ...

கண்ணிமைக்கும் நொடியினிலே
எரிந்துபோன மாயம் என்ன ..
என்னவளின் கனவுகளும்
இமைமூடா நினைவுகளும் !!!...

சொன்னதுவே சோகமாக
ஆண்குயிலும் அழுகையோடே ...

கடந்துபோன இன்பங்களும் ..
விரகத்தின் துன்பங்களும்...
துணையாகி போனதுவே
ஆண்குயிலின் இரவுகளில் ....

வசந்தங்கள் வந்திடலாம் ...
பூக்களதும் பூத்திடலாம் ....
மறந்துவிட முடிந்திடுமோ
குயிலதனின் முதல்ராகம் !!!...

இதமாக தலை சாய்க்க
இடம் கொடுத்தேன் என்மடியில்...
அதன் கார்விலகி கவலைமாற
கடவுளிடம் தொழுது நின்றேன்

அபலையாக...