Saturday, July 11, 2009

சாபம் பெற்ற மலர்...



நம்மை நம்முள்
புதைத்துக்கொண்ட இரவுகள்
இனி வராமல் போகலாம் ..

உன்னால் நிரப்பப்பட்ட
என் உயிர் கோப்பை
ஒரு நாள் உடைபட்டு
என் உதிரத்தின் மணம்
உன் நினைவுகளில்
உலா வரலாம் ....
தளர்ந்து விடாதே ...

வரவேற்பறையில்
வாடிய மலரின் அலங்காரமா ?...
வேண்டவே வேண்டாம் ...
நேற்றைய தினங்களின்
நாட்காட்டி தாள்களாய்....
கிழித்தெறி என் கவிதைகளை ...

எவைகளின் பார்வைக்காய்
ஏங்கி எழுதுகிறேனோ
அவைகளை மூடிக்கொள் ..
திறக்கவே வேண்டாம் ...
என் கவிதைகளுக்காய்
உன் விழிகளை குருடாக்கி விடு ....

இருவரும்
பார்த்திருந்த நாட்களில்
இதயங்களைதானே
தொலைத்துகொண்டோம் ..
உன் நினைவுகளோடு
ஒரு ஜென்மத்தை கடந்துவிட்டேன் ..

பூக்கின்ற
மலர்கள் எல்லாம்
பூஜைக்கு மட்டுமா ???
இல்லை ...இல்லை
சவமஞ்சத்தை  அலங்கரி என
சாபம் பெற்று வந்த
மலர்களும் இல்லையா ...???...